Wednesday, May 27, 2009

அவசர கடிதம்

பிரியமானவர்களே,

நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் புழங்கிக்கொள்ளட்டுமென என் அறையின் சாவியை கதவிடுக்கில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். "இப்படி சாவியை வெளியே வைத்துவிட்டு போகிறீர்களே... ஏதாவது களவு போய்விட்டால் என்ன செய்வீர்கள்?!" என்ற கேள்வியைக் கேட்காத நபரில்லை. "இந்த அறையின் ஓரே உயரிய பொருள் நான்தான். நான் வெளியே இருக்கையில் என்ன கவலை?!" என முல்லா பாணியில் பதில் சொல்வது வாடிக்கை.

நிற்க. இன்று காலை ஆறு மணிக்கும் ஆறு பத்திற்கும் இடையேயான ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது செல்போன் களவாடப்பட்டு விட்டது. குளியலறைக்குள் "வில்லினையொத்த புருவம் வளைத்தனை..."பாடிக்கொண்டிருந்தபோது செல்லினை யாரோ வளைத்துவிட்டார்கள். அவசர தேவைக்கோ, காதலியோடு கதைக்கவோ, மாலை நேரத்துக் குடிக்கோ, பிள்ளையின் படிப்புச் செலவிற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ களவாடப்பட்டிருக்கலாம். காரணத்தோடுதானே எதுவும் காணாமல் போகிறது.

மூளையை எத்தனை கசக்கினாலும் எவரையும் சந்தேகம் கொள்ள இயலவில்லை. விடுதியறையின் இரும்புக்கதவுகள் திறக்கப்படாத அதிகாலையில் வெளியாட்கள் யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை. இருக்கிற நாற்பது மனிதர்களையும், இருபது அறைகளையும் துளாவும் அளவிற்கா நம்மிடம் நைச்சியம் இருக்கிறது. திருடிய ஒருவருக்காக முப்பத்தொன்பது மனிதர்களை எப்படி அவமானப்படுத்துவது?! வெட்டென மறந்தேன்.

கடவுள் புண்ணியத்தில் காசு இருக்கிறது. ஆனால், ஐந்தரை வருடங்களாய் தேடிச் சேர்த்த எண்கள்?! செல்போனை எடுத்த புண்ணியவான் சிம்கார்டையாவது வீசி விட்டுச் சென்றிருக்கலாம். அத்தனை அறம் இருக்கிறவன் ஏன் திருடுகிறான் என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.

ஆனது ஆகிவிட்டது. உங்களது எண்களைத் தெரியப்படுத்துங்கள். அடுத்த மொபைல் திருடு போகும்வரை கதைத்தாக வேண்டும்.

மிக்க அன்புடன்,
snmano

No comments: